» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பயிற்சி முகாம்!
வியாழன் 28, மார்ச் 2024 5:09:09 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நீர்வாழ் உயிரினங்களின் வகைப்பாட்டியியல் மற்றும் பல்வகைமையை மதிப்பீடுதல் குறித்த மூன்று நாள் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மைத்துறையின் சார்பாக "நீர்வாழ் உயிரினங்களின் வகைப்பாட்டியியல் மற்றும் பல்வகைமையை மதிப்பீடுதல்” குறித்த மூன்று நாள் செயல்முறை பயிற்சி நடைபெற்றது. முதுகலை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மீன்வள விஞ்ஞானிகள் மற்றும் உதவிப்பேராசிரியர்கள் ஆகியோருக்கு மீன் சிற்றினங்களை அடையாளம் காணுதல் மற்றம் உயிர் பல்வகைமையை மதிப்பீடுதல் பற்றிய புரிதலை மேம்படுத்த இப்பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் மீன் சிற்றினங்களில் உள்ள வெளிப்புற தோற்ற அமைப்புகளை அளவீடு செய்து மற்றும் துடுப்புகள் அல்லது செதில்களின் எண்ணிக்கை போன்ற அளவு அம்சங்களைக் கணக்கிடுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட மீன் சிற்றினத்தை விவரிக்க உதவும் மற்றும் அறியப்படாத இனத்தை அடையாளம் காண பயன்படுத்தலாம். மேலும், பிரைமர் மென்பொருள் உதவியுடன் மீன் பல்வகைமையை இடம் மற்றும் கால அளவு கோலில் மதிப்பீடு செய்தல். இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பவியலைக் கொண்ட மீன்வளங்களை பாதுகாத்தல் மற்றும் சிறந்த மேலாண்மை முறையை கடைபிடித்தல் பற்றி எடுத்துரைக்கப்பட்டன.
இதில் விளக்கப்பாடங்கள் மற்றும் செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர்(பொறுப்பு) நவ.சுஜாத்குமார் சான்றிதழ்களை பயிற்சியாளர்களுக்கு வழங்கினார். பேராசிரியர் மற்றம் தலைவர் ந. ஜெயக்குமார், கௌரவப் பேராசிரியர் வை. கி. வெங்கடரமணி, மற்றும் உதவிப்பேராசிரியர்கள் ரா. துரைராஜா மற்றும் ச. சதன், இப்பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.