» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கான வாய்ப்பு இல்லை : பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
திங்கள் 25, மார்ச் 2024 8:24:40 PM (IST)
தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்று சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்..
பிரதமர் தமிழக மக்களிடம் வாக்குகளை எதிர்பார்ப்பார் என்றால் அவர் நிச்சயமாக ஏமார்ந்து போவார் என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது "பாஜக என்றும் பொய்களை வலுவாக சொல்வதும், பொய்யை தவிர வேறு எதுவும் பேசாதிருப்பதும், பேசுகின்ற பொய்களை தொடர்ந்து பரப்புவதும் அவர்களுடைய வாடிக்கையான நடைமுறை. அந்த வகையில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை என்றும் நிறைவேற்றுவது கிடையாது.
பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை என்ற உறுதிமொழி எடுத்து தான் அரசியலில் இருக்கின்றனர். அவர்களிடம் இருந்து நேர்மையான உண்மையான தகவல்களை எதிர்பார்ப்பது சரியல்ல. தமிழகம் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கான வாய்ப்பு இல்லை.
தமிழகத்தின் எட்டு கோடி மக்களை முழுமையாக புறக்கணித்துவிட்டு எந்தவிதமான சிறப்பு திட்டங்களையும் இங்கு வழங்காமல் வெள்ள நிவாரணத்திற்கு கூட எந்தவித உதவியும் செய்யாமல், அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை கூட இன்னும் சின்ன கட்டிட பணியை கூட தொடங்காமல் ஒரு பிரதமர் தமிழக மக்களிடமிருந்து வாக்குகளை எதிர்பார்ப்பார் என்றால் அவர் நிச்சயமாக ஏமார்ந்து போவார்.
தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.பிரதமர் ஏதாவது கொண்டு வந்தார் என்று சொன்னால் மக்கள் மனம் மாறலாம். ஆனால் வெறுங்கையை வீசிக் கொண்டு வந்தால் மக்கள் அவருக்காக எதற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்க மாட்டார்களா? என்றார்