» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிறுதானிய உணவுத் திருவிழா : ஆட்சியர் கோ.லட்சுமிபதி தகவல்!
திங்கள் 27, நவம்பர் 2023 11:02:29 AM (IST)
தூத்துக்குடியில் வருகிற 30ஆம் தேதி சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பொதுமக்களாகிய நுகர்வோர்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவு திருவிழா நடத்திட தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுதானிய உணவுத்திருவிழாவானது வரும் 30.11.2023 அன்று பீச் ரோட்டில் உள்ள தூத்துக்குடி புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் வைத்து காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி உணவுத் திருவிழாவில் சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சி மற்றும் மேலும் பல்வேறு அரசுத்துறைகள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பள்ளி/கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் சார்பில் சிறுதானியங்கள் முக்கியத்துவம் தொடர்பான அனைத்து வகையான சிறுதானியங்களின் சிறப்புகள் தொடர்பான விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்படவுள்ளது.
மேலும், பாரம்பரிய சிறுதானிய உணவுகள் தயார் செய்து, அச்சிறுதானியத்தின் நன்மைகள் குறித்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்து / விநியோகம் செய்து நேரடி விளக்க செயல்பாடுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் சிறுதானிய உணவுத்திருவிழாவின் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளின் பயன்பாடு குறித்து தெரிந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.