» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியை உலுக்கிய டொர்னடோ சுழல்காற்று: நடந்தது என்ன? ஆய்வாளர் விளக்கம்!
திங்கள் 22, ஜூன் 2026 12:05:19 PM (IST)

தூத்துக்குடியில் அரிய நிகழ்வாக திடீரென ஏற்பட்ட 'டொர்னடோ' சூறாவளிச் சுழல்காற்று குறித்து நிலத்தியல் துறை பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை கடுமையான வெயில் நிலவி வந்தது. இந்நிலையில், மாலை சுமார் 3:00 மணியளவில் திடீரென வானிலை மாறி, மேகமூட்டம் சூழ்ந்தது. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் அருகே, வெளிநாடுகளில் அடிக்கடி தோன்றுவதைப் போன்ற சுழல்காற்று (Tornado) உருவானது.
தரையிலிருந்து அசுர வேகத்தில் சுழன்றடித்தபடி வான்நோக்கி எழும்பிய இந்த அதிசய நிகழ்வை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சூறாவளி காரணமாக, வாகைகுளம் சுங்கச்சாவடியின் மேற்கூரை உள்கட்டமைப்புகள் அனைத்தும் காற்றின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பெயர்ந்து, முற்றிலுமாகச் சேதமடைந்தன. இதன் காரணமாகச் சுங்கச்சாவடி இயக்கம் முற்றிலுமாக முடங்கியதுடன், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி வெளியேறி சாலையோரம் தஞ்சமடைந்தனர்.
மேலும், இந்தச் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தீம் பார்க்கிலும் சூறாவளி காற்று புகுந்ததில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பொழுதுபோக்குக் கட்டமைப்புகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் முடிவைத்தானேந்தல், புதூர், ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்ற தீவிர சுழல்காற்று ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சுழல் காற்று ஏற்படுவது இதுவே முதல் முறை என்பதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்த அரிய நிகழ்வு குறித்து தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலத்தியல் துறை பேராசிரியர் முனைவர் செல்வம் கூறுகையில், "தூத்துக்குடி பகுதியில் அரிதான சூறாவளி காற்றுச் சுழல் போன்ற (tornado-like) வளிமண்டல நிகழ்வு பதிவாகியுள்ளது. மாலை நேரத்தில் ஏற்பட்ட பலத்த இடியுடன் கூடிய மழை (thunderstorm) நேரத்தில், மேகத்திலிருந்து தரை நோக்கி இறங்கும் சுழலும் தூசி தூண் (rotating funnel/dust column) காணப்பட்டு, அதன் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன.
அறிவியல் ரீதியாக பார்க்கும்போது, இது ஒரு சிறிய அளவிலான Tornado அல்லது "landspout” வகை நிகழ்வுஇருக்கக்கூடும். இந்த நிகழ்வு உருவாக காரணமாக, கடலோர பகுதியாக இருக்கும் தூத்துக்குடியில் இருந்து அதிகமான வெப்பமான மற்றும் ஈரமான காற்று (moist maritime air) மேலே எழுந்தது. அதே சமயம் மேல்மட்டங்களில் இருந்த குளிர்ந்த காற்று உடன் மோதியதால் வளிமண்டலத்தில் instability அதிகரித்து, காற்றின் திசை மற்றும் வேக வேறுபாடு (wind shear) மூலம் சுழற்சி உருவானது என்றும் விளக்கினார்.

இந்த சுழலும் காற்று மேலே எழும் updraft மூலம் செங்குத்தாக நீண்டு, மேகத்திலிருந்து கீழே funnel cloud உருவாகி, தரையைத் தொட்டபோது அது ஒரு குறுகிய கால Tornado ஆக மாறியது. சில தகவல்களின் படி, இது மிக நீளமான அல்லது வலுவான Tornado அல்ல; மெல்லிய, குறுகிய மற்றும் பலவீனமான சுழல் மட்டுமே காணப்பட்டது.
இந்த நிகழ்வு முக்கியமானது என்னவென்றால், இந்தியாவில் Tornado அரிதானதுடன், தென் இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டில் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அபூர்வம். பொதுவாக இத்தகைய Tornado-கள் West Bengal மற்றும் Odisha பகுதிகளில் மட்டுமே அதிகமாக பதிவாகின்றன. இன்றைய தூத்துக்குடி நிகழ்வு, கடலோர ஈரப்பதம், அதிக வெப்பநிலை, மற்றும் பலத்த இடியுடன் கூடிய மேக அமைப்பு சேர்ந்து வந்தால், தமிழ்நாட்டிலும் அரிதாக Tornado போன்ற நிகழ்வுகள் உருவாகலாம் என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிக்கிறது என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது, 232 மது பாட்டில்கள் பறிமுதல்!
திங்கள் 22, ஜூன் 2026 8:08:20 PM (IST)

பள்ளி, மதரஸா மாணவர்களுக்குப் பாராட்டு விழா!
திங்கள் 22, ஜூன் 2026 8:03:48 PM (IST)

வாலிபரை வெட்டிய நண்பருக்கு போலீசார் வலைவீச்சு!
திங்கள் 22, ஜூன் 2026 8:00:44 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 585 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 22, ஜூன் 2026 5:50:00 PM (IST)

கீழூர் ரயில் நிலையம் அருகே சாலை, பாதாள சாக்கடை மூடி சேதம் - சீரமைக்கக் கோரிக்கை!
திங்கள் 22, ஜூன் 2026 5:44:27 PM (IST)

அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை தொழில் மற்றும் கல்விக்கடன்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!
திங்கள் 22, ஜூன் 2026 4:17:41 PM (IST)








