» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜூன் 21-ல் நீட் தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 2,015 மாணவர்கள் எழுதுகின்றனர்!

வெள்ளி 19, ஜூன் 2026 8:40:29 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் நீட் தேர்வுகள் வரும் ஜூன் 21-ஆம் தேதி பிற்பகல் நடைபெறவுள்ளதாகவும், இதனை மொத்தம் 2,015 தேர்வர்கள் எழுதவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் எட்டையபுரம் ஆகிய வட்டங்களில் மொத்தம் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்விற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் கல்லூரிக் கல்வித்துறை ஆகிய துறைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 18-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறைகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்:

தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு எவ்வித சிரமமுமின்றி எளிதாகச் சென்றடையும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) மூலம் முக்கிய வழித்தடங்களில் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு நேரக் கட்டுப்பாடுகள்:

தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தேசிய தேர்வு முகமையால் (NTA) நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி, தேர்வு நாளான ஜூன் 21 அன்று முற்பகல் 11.00 மணிக்கு முன்னரே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் ஆஜராகிவிட வேண்டும். உரிய நேரமான பிற்பகல் 01.30 மணிக்கு மேல் தாமதமாக வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்கள்:

தேர்வு எழுத வரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் பேஜர், செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் (Smart Watch), தகவல்கள் பதிவு செய்யும் இதர மின்னணு சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் (பேக்குகள்) போன்ற எவ்விதப் பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory