» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை மாவட்டத்தில் 11 மையங்களில் நீட் மறுதேர்வு: கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

வெள்ளி 19, ஜூன் 2026 11:41:46 AM (IST)

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் மறுதேர்வு வருகிற ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேர்வு நடத்துதல், மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்த விபரங்கள் வருமாறு: நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி வட்டங்களில் உள்ள 11 தேர்வு மையங்களில் இந்த நீட் மறுதேர்வு ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வை மொத்தம் 6,559 தேர்வர்கள் எழுத உள்ளனர். பொதுவான தேர்வர்களுக்குப் பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 05:15 மணி வரையும், மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்குப் (PwD / PwBD) பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 06:20 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

அடிப்படை மற்றும் பேருந்து வசதிகள்:

தேர்வர்கள் தடையின்றி வந்து செல்லப் போதுமான சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தேர்வு மையங்களிலும் குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளும், அவசர மருத்துவத் தேவைகளுக்காக ஒவ்வொரு மையத்திற்கும் தனித்தனியாக மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளன.

கடுமையான நேரக் கட்டுப்பாடு:

தேர்வெழுத வரும் மாணவர்கள் பிற்பகல் 01:30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டும். பிற்பகல் 01:30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சிரமமும் ஏற்படாதிருக்க, தேர்வு மையத்தின் இருப்பிடத்தைத் தேர்வர்கள் ஒரு நாளுக்கு முன்பே நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆடை மற்றும் ஆபரணக் கட்டுப்பாடுகள்:

தேர்வு எழுதுவோர் தங்கள் மதம் அல்லது பழக்கவழக்கங்களின்படி குறிப்பிட்ட ஆடைகளை அணிய வேண்டியிருந்தால், முழுமையான சோதனைக்கு ஏதுவாகத் தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே வர வேண்டும். தேர்வர்கள் முழுக்கை சட்டை (Full sleeve shirts) மற்றும் ஷூ (Shoes) அணிந்து வரக் கூடாது; சாதாரண காலணிகளுக்கே அனுமதி உண்டு. தேர்வெழுத வரும் திருமணமான பெண்கள் தாலி செயின் அணிந்து கொள்ள அனுமதி உண்டு, ஆனால் மற்ற ஆபரணங்கள் அணிந்து வர அனுமதியில்லை.

தனிப்பட்ட முறையில் வெளிப்படையான (Transparent) தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து வரலாம். மொபைல் போன், மின்னணு சாதனங்கள், டிஜிட்டல் கடிகாரங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிற பொருட்களைத் தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல முற்றுப்புரிமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் (Admit Card) தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ள விதிமுறைகளைத் தேர்வர்கள் முழுமையாகப் படித்துக் கடைப்பிடிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory