» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பார் பூட்டை உடைத்து சோதனையிட்ட 4 போலீசார் இடமாற்றம்: எஸ்பி அதிரடி!

ஞாயிறு 22, பிப்ரவரி 2026 8:48:36 AM (IST)

தூத்துக்குடியில் மதுபான பார் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்து சோதனையில் ஈடுபட்ட விவகாரத்தில், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீசாரை பணி இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபான பார் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 18-ஆம் தேதி காலை 7:30 மணியளவில், சிவில் உடையில் வந்த 4 போலீசார் இந்த பாருக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்த ஊழியர்கள் இருவரை விசாரணை என்ற பெயரில் பிடித்துத் தாக்கியதோடு, மதுபான பாரின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர்.

உள்ளே தீவிர சோதனை நடத்திய போலீசார், அங்கு சட்டவிரோதமான பொருட்கள் ஏதும் சிக்காததால் ஆத்திரமடைந்து, அங்கிருந்த காலி மதுபாட்டில் மூட்டைகளைக் கீழே தள்ளிச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பாருக்கு வெளியே வந்த போலீசார், அங்கு நின்றிருந்த பொதுமக்களையும் தாக்கி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். 

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகின. இந்த வீடியோ காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து முறையான விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில், பாருக்குள் அத்துமீறி நுழைந்த 4 பேரும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த போலீசார் என்பது உறுதி செய்யப்பட்டது.

சட்டவிரோத மது விற்பனை நடக்கிறதா என்று சோதனையிடச் சென்றதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டாலும், அதிகாலை நேரத்தில் கடையின் பூட்டை உடைத்ததும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்களைத் தாக்கியதும் மனித உரிமை மீறல் எனப் புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய டவுன் சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன், போலீஸ் ஏட்டு சண்முகநாதன் ஆகியோர் ஆயுதப் படைக்கும், ஏட்டுக்கள் சமியுல்லா, சரவணன் ஆகியோர் முறப்பநாடு காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்பி மதன் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை தூத்துக்குடி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory