» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அகரம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை சசிலதா நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு !
திங்கள் 4, செப்டம்பர் 2023 9:54:46 AM (IST)
அகரம் தூ.நா.தி.அ.க. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை சசிலதா தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் தூ.நா.தி. அ.க. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியையாக பணிபுரிந்து வருபவர் இரா.சு.சகிலதா. இவர் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
இவர் 1995 முதல் இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்து, ஆறுமுகனேரி- முத்துகிருஷ்ணாபுரம், மங்களபுரம், மணக்காடு நாசரேத், நீல்புரம், மாவடிபண்ணை, தூத்துக்குடி விக்டோரியா துவக்கப்பள்ளி, பண்டாரம்பட்டி, இரட்சண்யபுரம், கொடியன்குளம், தங்கம்மாள்புரம் அத்திமரப்பட்டி, மறவன்மடம், நெடுங்குளம், மஞ்சள்நீர்க்காயல் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தூ.நா.தி.அ.க. துவக்கப்பள்ளிகளில் தலைமையாசிரியையாக பணிபுரிந்துள்ளார்.
தலைமையாசிரியை சசிலதா பணியை பாராட்டி 2021, 2022 இல் அரிமா சங்கத்தின் சார்பில் சிறந்த தலைமையாசிரியை விருதும், மதுரை அறம் செய விரும்பு அறக்கட்டளை மூலம் நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ள தலைமையாசிரியை சசிலதா இன்று (05.09.2023) சென்னையில் நடைபெறும் அரசு விழாவில் நல்லாசிரியர் விருதினை பெற்றுக்கொள்கிறார்.