» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:23:12 AM (IST)



நவத்திருப்பதி ஸ்தலங்களில் 7-வது ஸ்தலமாகவும், சுக்கிர ஸ்தலமாகவும் விளங்கும் தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இக்கோவிலின் பங்குனித் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாட்களான ஏப்ரல் 5-இல் கருட சேவையும், நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சுவாமி நிகரில் முகில்வண்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. காலை 8 மணியளவில் உற்சவர் ஸ்ரீநிகரில் முகில்வண்ணன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.

காலை 8:50 மணிக்குச் சுவாமிக்குக் கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா கோபாலா' என விண்ணதிர கோஷமிட்டபடி திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கீழ ரதவீதியிலிருந்து புறப்பட்ட தேர், தெற்கு ரதவீதி வழியாக காலை 10 மணியளவில் மேல ரதவீதியை வந்தடைந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பகல் நேரத்தில் தேர் அங்கு நிறுத்தப்பட்டது. பின்னர் மாலை 4:30 மணிக்கு மீண்டும் பக்தர்கள் தேரை இழுக்கத் தொடங்கினர். வடக்கு ரதவீதி வழியாகச் சென்ற தேர், மாலை 6 மணியளவில் கீழ ரதவீதியில் உள்ள நிலையை வந்தடைந்தது.

இந்த நிகழ்வில் அர்ச்சகர்கள் திருவேங்கடத்தான், ராகுல், நிர்வாக அதிகாரி அஜித், ஆய்வாளர் நம்பி மற்றும் ஆழ்வார்திருநகரி மின்வாரியத் துறை துணைப் பொறியாளர் விஜய் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர். ஸ்ரீவைகுண்டம் துணைப் போலீஸ் சூப்பிரிண்டு நிரேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory