» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி கட்டாயம்: ஆட்சியர் இரா.சுகுமார் அதிரடி உத்தரவு!

வியாழன் 2, ஏப்ரல் 2026 5:08:56 PM (IST)

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் வேட்பாளர்கள் விளம்பரங்கள் வெளியிட கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடகச் சான்றளிப்பு மற்றும் ஊடகக் கண்காணிப்புக் குழு (MCMC) அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:

1. அனுமதி பெற வேண்டிய ஊடகங்கள்:

தொலைக்காட்சி, உள்ளூர் கேபிள் டிவி, வானொலி, சமூக வலைத்தளங்கள் (Facebook, X, Instagram போன்றவை), இணையதளங்கள், திரையரங்குகள், பொது இடங்களில் உள்ள டிஜிட்டல் திரைகள், மொபைல் போன் குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் குரல் வழி அழைப்புகள் (Voice Calls) ஆகியவற்றில் விளம்பரம் வெளியிடும் முன்பாகக் கட்டாயம் முன் அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும்.

2. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்:

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்: விளம்பரம் வெளியிட உத்தேசித்துள்ள நாளுக்கு குறைந்தது 3 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.

சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் இதர அமைப்புகள்: குறைந்தது 7 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.

3. நாளிதழ் விளம்பரங்களுக்கான விதிகள்:

சாதாரண நாட்களில் நாளிதழ்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு முன் அனுமதி தேவையில்லை (அதன் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்). இருப்பினும், வாக்குப்பதிவு நாள் (23.04.2026) மற்றும் அதற்கு முந்தைய நாள் (22.04.2026) ஆகிய இரண்டு தினங்களில் நாளிதழ்களில் வெளியாகும் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் கட்டாயம் 48 மணி நேரத்திற்கு முன்னதாக MCMC குழுவின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

4. விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் MCMC மையத்தில் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கீழ்க்கண்டவற்றை இணைக்க வேண்டும்:

விளம்பரத்தின் மாதிரி நகல்.

விளம்பரத்தின் உரை (Script).

விளம்பரத்திற்கான உத்தேசச் செலவு மதிப்பீடு.

5. விதிமீறல்கள் மற்றும் நடவடிக்கைகள்:

அனுமதியின்றி விளம்பரங்களை வெளியிடுவது மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது தேர்தல் விதிமீறலாகும். அனுமதிக்கப்படாத விளம்பரங்கள் கண்டறியப்பட்டால்:

அதன் செலவினம் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.

தேர்தல் விதிகளின்படி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory