» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 18 வேட்புமனுக்கள் தாக்கல்!

வியாழன் 2, ஏப்ரல் 2026 8:36:19 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று ஒரே நாளில் மொத்தம் 18 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (02.04.2026) ஒரே நாளில் மட்டும் மொத்தம் 18 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 16 ஆண்களும், 2 பெண்களும் அடங்குவர்.

தொகுதி வாரியான விபரங்களின்படி, இன்று அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 6 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய தொகுதிகளில் தலா 3 பேர் வீதமும், விளாத்திகுளம் தொகுதியில் 2 பேரும், கோவில்பட்டி தொகுதியில் ஒருவரும் இன்று தங்களது மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த மார்ச் 30-ஆம் தேதி முதல் இன்று வரை தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் தலா 9 மனுக்களும், தூத்துக்குடியில் 6 மனுக்களும், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி தொகுதிகளில் தலா 5 மனுக்களும் இதுவரை பெறப்பட்டுள்ளன.

நாளை (03.04.2026) பொது விடுமுறை தினம் என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது என்றும், நாளை மறுநாள் சனிக்கிழமை (04.04.2026) மீண்டும் வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

மாட்டு வண்டியில் ஊர்வலமாக

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் 'நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்' கட்சி சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் அருணா தேவி, இன்று மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

கட்சியின் தலைவர் பொன் குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்திற்குப் பின், தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் மனுவைச் சமர்ப்பித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: ஒட்டப்பிடாரத்தில் அரசு மருத்துவமனை, பெண்களுக்கெனத் தனிப் பள்ளி மற்றும் கல்லூரிகளை உருவாக்குவேன்.

நலிவடைந்துள்ள புதியம்புத்தூர் ஜவுளித் தொழிலை மீட்டெடுத்து வேலைவாய்ப்புகளைப் பெருக்குவேன். மது ஒழிப்பு குறித்துப் பொய் வாக்குறுதி அளிக்கும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் இம்முறை தன் கட்சிக்கு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தருவார்கள் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory