» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் : வைகோ உறுதி!

ஞாயிறு 15, மார்ச் 2026 8:46:20 AM (IST)



"சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு ஒரு சதவீதம் கூட கிடையாது" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்த அவர், இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில், தேர்தலுக்குப் பின்னர் கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இச்சம்பவத்தை அரசியலாக்கி திமுக மீது பழி சுமத்தச் சிலர் முயல்வதாகவும், முந்தைய ஆட்சிக் காலங்களை விட தற்போது இத்தகைய பிரச்சினைகள் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்றும், அந்த வெற்றிக்காகத் தான் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு முடிந்த பின்னரே மதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்துத் தெரியவரும் என்றார். மேலும், தலைமைத் தேர்தல் அதிகாரியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியிருப்பது சரியான நடவடிக்கை என்றும், அவ்வாறு நடந்தால் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.

மாணவியின் குடும்பத்திற்கு வைகோ நேரில் ஆறுதல்

வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவியின் பெற்றோரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

தொடர்ந்து, அங்கிருந்தபடியே தமிழக முதல்வரின் தனிச் செயலாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட வைகோ, மாணவியின் குடும்பச் சூழலை எடுத்துக் கூறினார். இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசின் சார்பில் தகுந்த உதவிகள் அந்தக் குடும்பத்திற்குக் கிடைப்பதை உறுதி செய்யவும் முதல்வரின் கவனத்திற்கு இவ்விவகாரத்தைக் கொண்டு செல்லுமாறு அவர் பரிந்துரைத்தார்.

உணவு ஏதும் உட்கொள்ளாமல் துக்கத்தில் ஆழ்ந்திருந்த மாணவியின் பெற்றோரை ஆசுவாசப்படுத்தும் வகையில், வைகோ அவர்களே எலுமிச்சை பழத் தேநீர் வழங்கி அவர்களைத் தேற்றினார். இந்தச் சந்திப்பின் போது மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், கோவில்பட்டி நகரச் செயலாளர் பால்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory