» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் ஊழியர் - போலீஸ் ஏட்டு மோதல் : போலீசார் விசாரணை!!

திங்கள் 8, செப்டம்பர் 2025 8:30:36 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்பியதில் ஏற்பட்ட தகராறில் கோவில் ஊழியர், போலீஸ் ஏட்டு மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருகின்றனர். இந்த கோவிலில் சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை அரசனூரை சேர்ந்த விவேக் (34) உள்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலையில் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று விடுமுறை தினம் என்பதால், கோவிலில் பொது தரிசன வரிசை, ரூ.100 கட்டண தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்கள் வரிசை ஆகியவற்றில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அப்போது குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் பிரபாகரன் (40) என்பவர் திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அவர் தனக்கு வேண்டிய சிலரை மூத்த குடிமக்கள் வழியில் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவலறிந்ததும் கண்காணிப்பாளர் விவேக் அங்கு வந்து, மூத்த குடிமக்கள் செல்லும் வழியில் மற்றவர்கள் நுழையாதவாறு தடுப்புகள் வைத்தார். மேலும் இங்கு ஏற்கனவே கூட்டம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் முறைகேடாக நீங்கள் சிலரை கோவிலுக்குள் அனுப்பினால் எப்படி? என போலீஸ் ஏட்டு பிரபாகரனிடம் கேட்டுள்ளார்.

இதில் ஏட்டு பிரபாகரனுக்கும், கண்காணிப்பாளர் விவேக்கிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென இருவரும் ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், விவேக்கை புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். ஆனால் அங்கு வைத்து போலீசார் சிலர் தன்னை அடித்துவிட்டதால் காயமடைந்ததாக கூறி விவேக் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதேபோல் போலீஸ் ஏட்டு பிரபாகரனும் காயமடைந்ததாக கூறி ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கோவில் வளாகத்தில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக் மற்றும் போலீஸ் ஏட்டு பிரபாகரன் ஆகியோர் மோதிக் கொண்டபோது பக்தர்கள் சிலர் அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory