» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வணிக சிலிண்டர் விலை ரூ.30.50 குறைப்பு : எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 8:19:03 AM (IST)
வணிக சிலிண்டரின் விலை ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவன அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் சிலிண்டர்களின் விலை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
வணிக சிலிண்டர்கள் ரூ.1,960.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது அதன் விலை நேற்று மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.30.50 குறைக்கப்பட்டு, ரூ.1,930-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு முறையாக வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையை போன்று, டெல்லி, மும்பை, கொல்கத்தா பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் வணிக சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 3 மாதங்களில் வணிக கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.36 அதிகரித்திருந்த நிலையில், நேற்று ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் கடந்த மகளிர் தினத்தை முன்னிட்டு ரூ.100 குறைக்கப்பட்டது. தற்போது விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1,924.50-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர்களின் எண்ணிக்கை சுமார் 33 கோடியாக உள்ளது. 2025-2026-ம் ஆண்டுக்குள் மேலும் 75 லட்சம் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் வரும் என்று கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்டது. சமீபகாலமாக, மானிய சிலிண்டர்கள் குறித்து அரசு தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினர்.