» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேஜரிவாலுக்கு ஏப்.15 வரை நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்!
திங்கள் 1, ஏப்ரல் 2024 12:38:10 PM (IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து கேஜரிவால் விசாரித்து வந்தார். கேஜரிவாலின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
கேஜரிவாலை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்த நிலையில், ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட கேஜரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற உத்தரவையடுத்து திகார் சிறையில் இன்று அடைக்கப்படுகிறார்.
முன்னதாக, டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, கடந்த செவ்வாய்க்கிழமை திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், சஞ்சய் சிங் உள்ளிட்டோரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.