» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி : உத்தரபிரதேசத்தில் சோகம்
ஞாயிறு 31, மார்ச் 2024 11:57:49 AM (IST)
உத்தரபிரதேசத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் தியோரியா மாவட்டம் தும்ரி கிராமத்தை சேர்ந்தவர் ஷிவ்சங்கர் குப்தா. இவருக்கு திருமணமாகி ஆர்த்தி தேவி (வயது 42) என்ற மனைவியும், ஆஞ்சல் (14), சிருஷ்டி (11) என்ற 2 மகள்களும், குந்தன் (12) என்ற ஒரு மகனும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஷிவ்சங்கர் வேலைக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தார். குழந்தைகள் 3 பேரும் தூங்கி கொண்டிருந்த நிலையில், கணவருக்கு ‘டீ’ போட்டு கொடுப்பதற்காக ஆர்த்தி சமயலறைக்கு சென்றார்.
‘டீ’ போட அவர் கேஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வீட்டில் தீப்பற்றியதுடன், வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் ஆர்த்தியும், அவரது 3 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் ஷிவ்சங்கர் காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதன் பின்னர் போலீசார் விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.