» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளி ஆசிரியர் ஜெயசீலன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு!
திங்கள் 4, செப்டம்பர் 2023 9:58:50 AM (IST)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெயசீலன் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு மாநில அளவில் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ஜெயசீலன் மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.
இவர் 1995 ம் ஆண்டு முதல் 28 ஆண்டுகள் நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆசிரியர் பொறுப்பில் கூடுதலாக தேசிய மாணவர் படை (என்.சி.சி.) அலுவலராக 1996 முதல் 2021 ம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியுள்ளார். தேசிய அளவில் சிறந்த தேசிய மாணவர் படை அலுவலர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான என்.சி.சி. டைரக்டர் ஜெனரல் விருது 2021 ம் ஆண்டில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வரும் 5ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி வரலாற்றில் இது வரை தலைமை ஆசிரியர்கள் மட்டுமே மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்கள். உதவி ஆசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெறுவது பள்ளி வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ள ஆசிரியர் ஜெயசீலனுக்கு தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.