» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேருந்து மோதி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு: திருவிழாவிற்கு வந்த இடத்தில் சோகம்

சனி 4, ஏப்ரல் 2026 8:53:59 AM (IST)

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில், பங்குனி உத்திரத் திருவிழாவிற்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெட்டூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரகாஷ் (32), ஒரு லாரி ஓட்டுநர். அதே பகுதியைச் சேர்ந்த துரை மகன் கார்த்திக் (35), நாகர்கோவிலில் உணவகம் நடத்தி வந்தார். நண்பர்களான இவர்கள் இருவரும் பங்குனி உத்திரத் திருவிழாவைக் கொண்டாடுவதற்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, இருவரும் மோட்டார் சைக்கிளில் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து உறவினருக்கு உணவு வாங்குவதற்காகப் பக்கத்து ஊரான ரெட்டியார்பட்டிக்குச் சென்றனர். உணவு வாங்கிக்கொண்டு மீண்டும் ஊர் திரும்பியபோது, கடங்கநேரியைக் கடந்து நெட்டூர் விலக்கு அருகே வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று, எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான போலீசார், இருவரது உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை ஓட்டி வந்த மருதபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரைப் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பிரகாஷிற்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கார்த்திக்கிற்கு சண்முகராணி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருவிழாக் கோலத்தில் இருந்த நெட்டூர் கிராமத்தில், நண்பர்கள் இருவர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory