» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் முதல் முறையாக ரயில்வே டிக்கெட் பரிசோதகராக திருநங்கை நியமனம்!
வெள்ளி 9, பிப்ரவரி 2024 10:40:10 AM (IST)
தமிழகத்தில் முதல் முறையாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து பொறுப்பேற்றுள்ளார்.
திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அதேநேரம் திருநங்கைகளுக்கு வேலை கிடைக்குமா? என்ற கேள்வியை தகர்த்து ஒரு சில திருநங்கைகள் திறமையால் சாதித்து வருகிறார்கள். சுயதொழில் மட்டுமின்றி மத்திய, மாநில அரசு பணிகளிலும் திருநங்கைகள் அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று பதவி ஏற்றார். இதன்மூலம் தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
இதுதொடர்பாக திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக திகழும் சிந்து கூறுகையில், எனது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நான் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரயில்வே பணியில் சேர்ந்தேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந்தேன். ரயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினேன்.
இதற்கிடையே சிறு விபத்தில் எனக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மின்சார பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப்பட்டேன். டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்து, இன்று (நேற்று) பதவி ஏற்றுள்ளேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். திருநங்கைகள் மனம் தளர்ந்து விடக்கூடாது. கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டு திருநங்கைகள் முன்னேற வேண்டும் என்றார்.