» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
சனி 25, ஜூலை 2026 8:31:34 AM (IST)

"கடந்த கால ஆட்சியிலும் லாக்-அப் மரணங்களால் ஆட்சிகள் மாறின. தற்போதைய த.வெ.க. அரசுக்கும் கடந்த கால ஆட்சிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை" என்று தூத்துக்குடியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த வாலிபர் அருணாச்சலத்தின் வீட்டிற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "தூத்துக்குடி அருணாச்சலத்தைக் காவல்துறையினர் அழைத்துச் சென்று தாக்கியதில்தான் அவர் உயிரிழந்துள்ளார்.
அருணாச்சலத்தின் வருமானத்தை நம்பியே இந்த குடும்பம் வாழ்ந்து வந்தது. தற்போது அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; அருணாச்சலத்தின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காவல்துறையினர் வரம்பு மீறி, மனிதாபிமானமற்ற முறையில் தாயின் கண்முன்னே மகன் மீது தடியடி நடத்தியுள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனைக் கைது செய்யும் போது கூட, காவல்துறையினர் பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். காவல்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்துள்ளார் முதலமைச்சர் விஜய். விசில் சின்னத்திற்கு வாக்களித்ததன் பலனை மக்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் 'ஜனநாயகன்' படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாக்களித்த மக்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுத் தர அவர்கள் அக்கறை காட்டவில்லை.
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், சிவகங்கையில் நடந்த லாக்-அப் மரணம் போன்றவற்றால் அப்போதைய ஆட்சிகள் மாறின. அது அந்த ஆட்சிகளின் கடைசி கட்டத்தில் நடந்தது. ஆனால் இந்த ஆட்சியில் தொடக்கத்திலேயே இதுபோன்ற சம்பவங்கள் ஆரம்பித்துள்ளன.
முந்தைய ஆட்சிகளுக்கும், தற்போதைய ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; காட்சிகள் தான் மாறியிருக்கின்றன. மக்களுக்கு எந்தவித நன்மையும் விளையவில்லை. அரசு மருத்துவமனையில் நோயாளிகளை எலி கடித்து, அதற்குப் கட்டுப்போடும் அவலநிலைதான் நிலவுகிறது. பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சந்திக்கக்கூட அமைச்சருக்கு நேரமில்லை"என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். பேட்டியின் போது, தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் செயற்கை கால் அளவீடு முகாம்
சனி 25, ஜூலை 2026 12:43:29 PM (IST)

தூத்துக்குடி தாலுகாவில் 9 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம்: லஞ்ச ஒழிப்பு சோதனையால் அதிரடி!
சனி 25, ஜூலை 2026 11:06:48 AM (IST)

குடும்பத் தகராறு: மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை!
சனி 25, ஜூலை 2026 11:00:28 AM (IST)

மின்சாரம் தாக்கி 11 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஜூலை 2026 10:51:20 AM (IST)

உப்பு நிறுவன கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி - தூத்துக்குடி அருகே சோகம்!
சனி 25, ஜூலை 2026 10:45:32 AM (IST)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
சனி 25, ஜூலை 2026 10:13:53 AM (IST)








