» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கயத்தாறு, கழுகுமலையில் இடி, மின்னலுடன் கனமழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

சனி 20, ஜூன் 2026 8:17:02 AM (IST)

கயத்தாறு மற்றும் கழுகுமலைப் பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் நிலவி வந்த அனல் காற்று தணிந்து, குளிர்ந்த சூழல் உருவானதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கயத்தாறு பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் கண்மாய், குளங்கள் வற்றி, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. நேற்று காலையிலும் வெயில் வாட்டிய நிலையில், மாலை 4.30 மணியளவில் திடீரெனச் சூறாவளி காற்றுடன் பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் தங்களது முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். கயத்தாறு மட்டுமன்றி அதன் சுற்றுவட்டார கிராமங்களான ராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி, தலையாலநடந்தான்குளம், ஆத்திகுளம், அரசன்குளம், சாலைபுதூர், தெற்கு இலந்தைகுளம், சவலாப்பேரி, தளவாய்புரம், கடம்பூர் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் பலத்த மழை பெய்ததால் கண்மாய் மற்றும் குளங்களில் தண்ணீர் தேங்கியது.

இதேபோன்று, கழுகு மலைப் பகுதியிலும் அக்னி நட்சத்திரம் போல வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வரத்து வறண்டிருந்தது. நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு பரவலாகப் பலத்த மழை பெய்தது.

சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் கழுகு மலை திருமாளிகை தெரு, வேத கோவில் தெரு, நாராயணசாமி கோவில் தெரு, ஆறுமுகம் நகர், கோவில்பட்டி மெயின் ரோடு உள்ளிட்ட அனைத்துத் தெருக்களிலும் தண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி, தாழ்வான பகுதிகளில் தேங்கியது. இரவு வரை நீடித்த லேசான சாரல் மழையால் இப்பகுதியில் வெப்பம் முழுமையாகத் தணிந்து குளிர்ச்சி நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory