» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!

திங்கள் 15, ஜூன் 2026 4:00:44 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. 

இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா வழங்குதல், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டுதல், தொழில் கடனுதவி, முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 524 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது மிக விரைவாகவும் உரிய முறையிலும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவிட்டார்.

ஆட்சியர் கூட்டரங்கிற்குள் செல்வதற்கு முன்னதாக, அலுவலக வளாகத்திற்கு நேரில் வந்து அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்தார். அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்த அவர், அவரிடமிருந்து 22 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். மேலும், இன்றைய தினம் மூத்த குடிமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக இடத்திற்கு நேரில் சென்று, முதியவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியர் இன்முகத்துடன் பெற்றுக் கொண்டார்.

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி:

இதனைத் தொடர்ந்து, ஜூன் 15 முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் "முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியினை" முறைப்படி ஏற்றுக் கொண்டனர்.

கடந்த வாரம் (08.06.2026) நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த நபர்களின் மனுக்களுக்கு உடனடித் தீர்வாக, 3 பயனாளிகளுக்கு ரூ.1,72,500/- மதிப்பிலான பட்டாவுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார்.

மேலும், மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் 10 குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களுக்கு (Children Homes), "Sanitation First India” என்ற தொண்டு நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி (CSR Fund) மூலமாக 12 டெராஃபில் குடிநீர் வடிகட்டிகள் மற்றும் குழந்தைகளின் தினசரி பயன்பாட்டிற்கான தனிப்பட்ட சுகாதாரப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளையும் ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்திரசேகர், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory