» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாலியல் புகாரைத் திரும்பப் பெற வலியுறுத்தி தவெக எம்.எல்.ஏ மிரட்டல் - இளம்பெண் பரபரப்பு பேட்டி!

திங்கள் 8, ஜூன் 2026 8:10:55 AM (IST)

ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மற்றொரு பெண்ணையும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட நிர்வாகிகள் இருவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் ராதிகா, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இணைந்து செய்தியாளர்களை நேரில் சந்தித்துப் பரபரப்பான விபரங்களை வெளியிட்டார். அப்போது மாதர் சங்கச் செயலாளர் ராதிகா கூறுகையில், "இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவருக்கும் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். 

தவெக நிர்வாகிகளுக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்னை வி.ஜி. சரவணன் செயல்பட்டு வருவதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பெண் குறித்துச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது காவல் துறை உடனே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.


இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் செய்தியாளர்களிடம் கண்ணீருடன் கூறுகையில்: "இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் மிகக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். இச்சம்பவம் தொடர்பாகத் தமிழக முதல்வரைச் நேரில் சந்தித்துப் புகார் தெரிவிக்கச் சென்ற போது, என்னைக் காவல் துறையினர் தடுத்துவிட்டனர். இதையடுத்து, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் என். ஆனந்த் ஆகியோரைச் சந்தித்துப் புகார் அளித்துள்ளேன்.

பாலியல் புகாரைத் திரும்பப் பெற வலியுறுத்தி, அன்னை வி.ஜி. சரவணன் எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னைத் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். இச்சம்பவம் நடந்த போது என்னுடன் வந்த மற்றொரு பெண்ணுக்கும் பாலமுருகன், ஜெயபால் ஆகியோர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

அந்தப் பெண் தனது குடும்பச் சூழல் மற்றும் அவமானம் கருதி இதுவரை புகாரளிக்காமல் அச்சத்துடன் உள்ளார். இது தொடர்பாகவும் காவல் துறையினர் முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரின் பெயர்கள் தொடர்புபடுத்தப்பட்டு, மற்றொரு பெண்ணுக்கும் பாலியல் வன்கொடுமை நேரிட்டதாகப் புகார் எழுந்துள்ளதால் தூத்துக்குடி மாவட்ட அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory