» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூதாட்டி மீது மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு: தூத்துக்குடி கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் கைது!

திங்கள் 27, ஏப்ரல் 2026 9:08:16 AM (IST)

சாயல்குடி அருகே மூதாட்டியைத் தாக்கி நகை பறித்த வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த 2 கல்லூரி மாணவிகள் மற்றும் ஒரு வாலிபரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த இரண்டு இளம்பெண்கள் உள்ளிட்ட 3 பேர் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளனர். மாரியம்மாள் வீட்டிற்குள் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற அந்த கும்பல், மூதாட்டியின் கண்ணில் மிளகாய்ப்பொடியைத் தூவி அவரைத் தாக்கியுள்ளது. பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 1 பவுன் மோதிரம் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு அந்த கும்பல் தப்பியோடியது.

இச்சம்பவம் குறித்துச் சாயல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த நகை பறிப்பில் ஈடுபட்டது தூத்துக்குடியைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன் (25) என்பது தெரியவந்தது.

இதையடுத்து தூத்துக்குடியில் பதுங்கியிருந்த மூவரைப் பிடித்த தனிப்படை போலீசார், அவர்களைக் கைது செய்தனர். மேலும், அவர்கள் தூத்துக்குடியில் உள்ள ஒரு அடகுக் கடையில் அடகு வைத்திருந்த நகைகளையும் போலீசார் மீட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory