» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: தூக்கு தண்டனை பெற்ற காவலர்களுக்கு அவகாசம் அளித்த உயர்நீதிமன்றம்!

சனி 25, ஏப்ரல் 2026 8:49:44 AM (IST)

உலகையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 9 காவலர்களும், அந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மதுரை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் காவலர்களால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டதில், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்தது.

சுமார் 6 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் அதிரடித் தீர்ப்பளித்தார். இதில் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி சி.பி.ஐ தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 காவலர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

அப்போது நீதிபதிகள் "சி.பி.ஐ உங்களது தண்டனையை உறுதி செய்ய மனு அளித்துள்ளது. ஆனால், தண்டனை விதிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் நீங்கள் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை. இதற்காக நீதிமன்றம் உங்களுக்கு உரிய கால அவகாசத்தை வழங்குகிறது. தண்டனையை எதிர்த்து நீங்கள் மேல்முறையீடு செய்யுங்கள்" என்றுதெரிவித்தனர். 

இதற்குப் பதிலளித்த முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், தங்களுக்குத் தீர்ப்பு தொடர்பான முழுமையான ஆவணங்கள் கிடைக்கவில்லை எனக் கூறினார். அதற்கு நீதிபதிகள், "மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகலை வைத்து மேல்முறையீடு செய்யலாம்" என அறிவுறுத்தி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory