» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் என்பது திருவிழாவல்ல, தமிழகத்தைக் காக்கும் போர்: அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!

திங்கள் 6, ஏப்ரல் 2026 8:14:10 PM (IST)



இந்தத் தேர்தல் களம் என்பது வெறும் திருவிழா அல்ல; இது டெல்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்கும் இடையிலான போர்" என தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான திருமதி. கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளராக திரு. கா. கருணாநிதி போட்டியிடுகிறார். அவரது தேர்தல் வெற்றிக்காக அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையை (காரியாலயம்) அமைச்சர் கீதா ஜீவன் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தொடர்ந்து நிர்வாகிகளிடையே அமைச்சர் பேசியதாவது: "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுள்ளது. எங்களது தேர்தல் அறிக்கையில் கலைஞர் கனவு இல்லம், மகளிர் உரிமைத் தொகை உயர்வு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்வு எனப் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, பெண்களுக்கு வழங்கப்படும் ₹8,000 மதிப்பிலான பரிசுக் கூப்பன் திட்டம் மிக முக்கியமானது. அரசு பொருட்களை வாங்கித் தராமல், மக்கள் தங்களுக்கு வேண்டிய கடைகளில் தங்களுக்குப் பிடித்த பொருட்களைத் தாங்களே வாங்கிக்கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திமுக அரசின் சாதனைகளை வீடு வீடாகச் சென்று மக்களிடம் கொண்டு சேர்ப்பதே வெற்றிக்கான வழி. மதில் மேல் பூனையாக இருக்கும் நடுநிலை வாக்குகளைக் கலந்து பேசி உதயசூரியன் சின்னத்திற்குப் பெற்றுத் தருவது செயல்வீரர்களின் கடமை. தேர்தல் ஆணையம் மிகவும் கடுமையான விதிமுறைகளை விதித்துக் கண்காணித்து வருவதால், கூட்டணி கட்சியினர் மிகுந்த ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்."

"தேர்தல் காலம் என்பது ஒரு போர் போன்றது. இது நமது மண், மொழி மற்றும் மானத்தைக் காப்பாற்றுவதற்காக டெல்லி அணிக்கு எதிராகத் தமிழ்நாடு அணி நடத்தும் போர். தமிழகத்தைக் காப்பாற்றிட முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பது காலத்தின் கட்டாயம்," என்று அவர் உருக்கமாகப் பேசினார்.

இந்நிகழ்வில் திமுக வேட்பாளர் கா. கருணாநிதி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory