» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பறக்கும் படை சோதனையில் பிடிபட்ட கைத்துப்பாக்கி : ஆவணங்கள் இருந்ததால் விடுவிப்பு!

வெள்ளி 20, மார்ச் 2026 8:09:27 AM (IST)

நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், காரில் கொண்டு செல்லப்பட்ட கைத்துப்பாக்கி பிடிபட்டது. உரிய ஆவணங்கள் இருந்ததால் அந்த நபர் எச்சரிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட எல்லைகளில் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கயத்தாறு பகுதியில் கடம்பூர், எப்போதுவென்றான், விளாத்திகுளம் மற்றும் மதுரை செல்லும் சாலைகளில் நான்கு புறங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கயத்தாறு பகுதியில் பள்ளிக் கல்வித்துறை அலுவலர் மாடசாமி (மேடையாண்டி) தலைமையில், சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்திச் சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த நபரிடம் ஒரு கைத்துப்பாக்கி இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பாதுகாப்பு கருதி அந்தத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரை விசாரணைக்காகக் கயத்தாறு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் நிலையத்தில் நடத்திய விசாரணையில், அந்த நபர் நாகர்கோவிலில் இருந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் துப்பாக்கி காப்பகத்தில் ஒப்படைப்பதற்காக அந்தத் துப்பாக்கியைக் கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும், துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் மற்றும் உரிய ஆவணங்களை அவர் போலீசாரிடம் சமர்ப்பித்தார்.

ஆவணங்கள் சரியாக இருந்ததையடுத்து, அந்த நபரிடம் முறையான கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்ட போலீசார், துப்பாக்கியை மீண்டும் அவரிடம் ஒப்படைத்தனர். தேர்தல் நேரம் என்பதால் துப்பாக்கியைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த வழியாக வந்த 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீசார் அதிரடிச் சோதனையைத் தொடர்ந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory