» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுகவை அழித்த வரலாற்றுப் பெருமை எடப்பாடி பழனிசாமியையே சாரும்: ஓ. பன்னீர்செல்வம் சாடல்
செவ்வாய் 17, மார்ச் 2026 8:10:50 AM (IST)

அதிமுகவை அழித்த வரலாற்றுப் பெருமை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆகியோரையே சாரும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை கோவில்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான பி. கீதாஜீவன் தலைமை தாங்கினார். ஜி.வி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., நகர்மன்றத் தலைவர் கா. கருணாநிதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது: "சட்டப்பேரவையின் மாண்பைக் காத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரது வழியில் இன்று முதல்வர் ஸ்டாலினும் அனைவரையும் ஒருங்கிணைத்துச் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். திமுக கூட்டணி என்பது கொள்கை ரீதியிலான நிரந்தரக் கூட்டணியாக உள்ளது.
கடந்த காலங்களில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தபோது, அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அந்த ஒப்பந்தத்தைத் துச்சமாக மதித்தார். மாறாக, தற்போது திமுக கூட்டணியில் இணைந்தவுடன் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவே உண்மையான அரசியல் பண்பாடு.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறுத்திவிட்டார். ஆனால், தற்போது 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய ஒரே முதல்வர் ஸ்டாலின்தான். எடப்பாடி பழனிசாமியும் உதயகுமாரும் இணைந்து அதிமுகவைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டனர். அக்கட்சியை அழித்த பெருமை அவர்களையே சாரும். என்னைப் பற்றியோ, எனது அரசியல் பயணம் குறித்தோ பேச அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
முதல்வர் எடுத்த நடவடிக்கைகளால் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இளைஞர்கள் தாங்கள் படித்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பைப் பெறும் நிலை உருவாகியுள்ளது என்றார். இக்கூட்டத்தில் முன்னாள் எம்பிக்கள் ரவீந்திரநாத், கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ ஐயப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இக்கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை திமுகவினர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வரவேற்றனர். வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதா ஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல். ஏ., முன்னாள் எம்.பி.க்கள் ரவீந்திரநாத், கோபாலகிருஷ்ணன், முன்னாள் யூனியன் தலைவர் மாணிக்கராஜா, பீக்கிலிப்பட்டி முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் உலக வகைப்பாட்டியலாளர்கள் தின விழா!
புதன் 18, மார்ச் 2026 8:57:51 PM (IST)

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, மார்ச் 2026 8:36:39 PM (IST)

அரசியல் நாகரிகம் இல்லாமல் பெண்களை இழிவுபடுத்தும் அதிமுக: அமைச்சர் பி. கீதா ஜீவன் கடும் கண்டனம்
புதன் 18, மார்ச் 2026 8:11:21 PM (IST)

ஆட்சி மாற்றத்திற்குப் பின் மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும்: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
புதன் 18, மார்ச் 2026 5:31:31 PM (IST)

முதல்முறை வாக்காளர்கள் எதற்கும் அடிபணியாமல் வாக்களிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 4:06:13 PM (IST)

வாட்ஸ்அப் கேஓய்சி செய்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 3:37:06 PM (IST)








