» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தவெகவுடன் காங்கிரஸ் இணைந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: கடம்பூர் செ. ராஜு எம்.எல்.ஏ பேட்டி

புதன் 4, மார்ச் 2026 8:17:08 AM (IST)

தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தாலும், அது அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ-வுமான கடம்பூர் செ. ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "பாண்டவர்மங்கலம் தீப்பெட்டி ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களின் நலன் கருதி கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிமுக ஆட்சியில் நலவாரியம் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டு காலத்தில் அந்த நலவாரியத்தின் தற்போதைய நிலை என்னவென்றே தெரியவில்லை.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கும் அரசு, உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் தொழிலாளர்களுக்கு அதே தொகையை வழங்கியிருக்கலாம். அரசு அறிவித்த நிவாரணத்துடன், தீப்பெட்டி நலவாரியம் மூலமாகவும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.

அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. தவெக இதுவரை தேர்தலைச் சந்திக்கவில்லை. அக்கட்சியுடன் காங்கிரஸ் இணைந்தாலோ அல்லது அவர்கள் தனித்து நின்றாலோ அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. தமிழகத்தில் திமுகவுக்கு ஒரே மாற்று அதிமுக தான் என்பது கடந்த காலத் தேர்தல்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆட்சியில் தேசியக் கட்சிகள் கால் பதிக்க வாய்ப்பில்லை. எங்கள் கூட்டணியில் 'ஆட்சியில் பங்கு' என்ற கோரிக்கை எழவில்லை; அத்தகைய குரல்கள் திமுக கூட்டணியில்தான் ஒலிக்கின்றன. "1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் மதிமுகவுக்கு அங்கீகாரம் கிடைத்ததுடன், அக்கட்சியின் சின்னத்தையும் தக்கவைக்க முடிந்தது. இதை வைகோ மறந்துவிட்டார். 

2011-இல் ஜெயலலிதா அவர்கள் மதிமுகவுக்கு 12 இடங்கள் தருவதாகக் கூறியும், அதனை ஏற்காமல் தேர்தலையே வைகோ புறக்கணித்தார். ஆனால், 2021-இல் திமுக கூட்டணியில் அவருக்கு வெறும் 6 இடங்களே ஒதுக்கப்பட்டன. வரும் தேர்தலில் மதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடப் போகிறது என்பதை வைகோ தெளிவுபடுத்த வேண்டும்," இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory