» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சமூக சேவை : தூத்துக்குடி நீதிக்குழுமம் தீர்ப்பு

செவ்வாய் 3, மார்ச் 2026 7:40:21 PM (IST)

கொலை வழக்கில் தொடர்புடைய இளஞ்சிறார் ஒருவருக்கு, அரசு மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் சமூக சேவை செய்ய தூத்துக்குடி சிறார் நீதிக்குழுமம் நூதனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குருவார்பட்டியைச் சேர்ந்த மாயழகன் என்பவரது மகன்கள் முருகன் (26), கண்ணன் (27) மற்றும் மகள் சிந்தாமணி. இதில் சிந்தாமணி, அதே ஊரைச் சேர்ந்த ஜேசுராஜ் என்பவரது மகன் ஜெயகுமார் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமண விவகாரத்தில் இரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

கடந்த 28.05.2016 அன்று கண்ணன் வீட்டின் முன்பு அவரது சகோதரர் முருகன், சித்தி சந்தணமாரி, அத்தை மாரியம்மாள் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஜேசுராஜ், அவரது மகன் சதீஷ்குமார் (19) மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகியோர் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் முருகன் உள்ளிட்ட நால்வரையும் சரமாரியாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த முருகன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இது தொடர்பாகச் சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் ஜேசுராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இந்த விடுதலையை எதிர்த்துப் போலீசார் தற்போது மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய இளஞ்சிறார் மீதான விசாரணை தூத்துக்குடி மணி நகரில் உள்ள இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிக்குழும முதன்மை நடுவர் எஸ். பாக்கியராஜ் மற்றும் உறுப்பினர் சரவணன் ஆகியோர், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதித்தனர்.

தண்டனைக் காலத்தை அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சமூக சேவையாகக் கழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குக் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை, மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவிற்கு வரும் நோயாளிகளுக்கு அவர் சேவை செய்ய வேண்டும். மேலும், அவருக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் உதவி வழக்கறிஞர் முருகபெருமாள் ஆஜராகி வாதிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory