» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நம்மாழ்வார் நினைவு தினம் மாட்டு வண்டிப் பந்தயம் விதை திருவிழா!

திங்கள் 16, பிப்ரவரி 2026 8:16:50 AM (IST)



விளாத்திகுளத்தில் நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிப் பந்தயம் மற்றும் விதை திருவிழா நடைபெற்றது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் மற்றும் பாரம்பரிய விதை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இப்போட்டிகள் பூஞ்சிட்டு மற்றும் தேன்சிட்டு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 82 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.

பூஞ்சிட்டு பிரிவு பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மற்றும் ராஜீவ் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.தேன்சிட்டு பிரிவு போட்டியினை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் ரோஹித் லாஜிஸ்டிக்ஸ் காண்டீபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விதை திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில், பாரம்பரிய நெல் ரகங்கள், கரிசல் காடு பகுதியில் விளையக்கூடிய சிறுதானியங்கள் மற்றும் காய்கறிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும், பனை ஓலையினால் செய்யப்பட்ட கம்மல், நெத்திச்சுட்டி, வளையல், கழுத்துப்பாசி மற்றும் தலைக்கு அணியும் குப்பிகள் எனப் பனைப் பொருட்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. இக்கண்காட்சியினைச் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு (மாட்டு வண்டி ஓட்டுநர்கள்) தமிழக ஏர் உழவன் விவசாயிகள் சங்கம் சார்பில் சிறப்பான பரிசுகள் வழங்கப்பட்டன. விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக மாடுகளுக்கு ஊட்டச்சத்தாக தலா 50 கிலோ எடையுள்ள இரண்டு சாக்கு பேரிச்சம்பழங்கள் சுற்றுச்சூழல் காக்க மரக்கன்றுகள் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேஷ் உழவர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்டத் தலைவர் ராமர், விளாத்திகுளம் ஒன்றியத் தலைவர் காளிமுத்து ராஜ், நகரத் தலைவர் செல்லத்துரை மற்றும் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory