» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)
திருச்சியிலிருந்து சென்னை வழியாக நியூஜெபல்குரிக்கு இயக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் ரயிலை மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்படுத்தும் வகையில், நாகர்கோவில் - மங்களூரு, நாகர்கோவில் - நியூ ஜல்பைகுரி (மேற்கு வங்கம்) மற்றும் திருவனந்தபுரம் - தாம்பரம் வழியாக அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுடன் (குளிர்சாதன வசதி இல்லாமல்) இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நிறுத்தம் கால அட்டவணைகளில் ஒரு சில மாற்றங்கள் செய்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரயில்
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று காத்திருப்போர் பட்டியல் உடன் இயங்கி வருகிறது. இந்த ரயிலை இரணியல் ரயில் நிலையத்தில் இரண்டு மார்க்கங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்ததாக இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து தாம்பரம் மார்க்கம் பயணிக்கும் போது திருவனந்தபுரத்திலிருந்து பகல் 10:40 மணிக்கு புறப்பட்டு நடுஇரவு 23:45 மணிக்கு தாம்பரம் சென்று சேர்கிறது.
இந்த நடு இரவு நேரத்தில் தாம்பரம் செல்லும் போது பயணிகளுக்கு பாதுகாப்பு பிரச்சினைகள், சென்னை நகரத்துக்கு பல்வேறு இடங்களுக்கு செல்ல போக்குவரத்து இல்லை. இதை தவிர்க்க தாம்பரம் ரயில் நிலையத்தில் காலை 5:00 மணி வரை காத்திருந்த விடிந்த பின்னர் பேருந்துகளில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்யும் நிலை உள்ளது.
ஆகவே இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்து திருவனந்தபுரத்திலிருந்து மதியம் சுமார் 3:30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலிருந்து 5:00 மணிக்கு புறப்படும் படியாக இயக்கி தாம்பரத்துக்கு அதிகாலை 04:10 மணிக்கு செல்லுமாறு இயக்க வேண்டும். இதே கால அட்டவணையில் இயங்கும் நாகர்கோவில் - தாம்பரம் வாரம் இருமுறை ரயிலின் சேவையில் மாற்றம் செய்து வியாழக்கிழமைக்கு பதில் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலிருந்து புறப்படுமாறு இயக்கலாம்.
நாகர்கோவில் - மங்களுர் சந்திப்பு அம்ரித் பாரத் ரயில்
நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம் வழியாக மங்களுர் சந்திப்புக்கு இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில் தற்போது நாகர்கோவிலில் இருந்து காலை 11:40 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 5:00 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது.
மார்க்கத்தில் இயங்கும் மற்ற ரயில்களின் ஒரு ஒப்பீடு
• நாகர்கோவில் - மங்களுர் சந்திப்பு அம்ரித் பாரத் ரயில் 19 நிறுத்தங்கள் பயணிநேரமாக 17.20 மணி நேரம்
• நாகர்கோவில் - காந்திதாம் ரயில் 22 நிறுத்தங்கள் பயணிநேரமாக 13.20 மணி நேரம்
• கன்னியாகுமரி – மங்களுர் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் 51 நிறுத்தங்கள் பயணிநேரமாக 17:00 மணி நேரம்
இந்த ரயிலை மற்ற ரயில்களும் ஒப்பிடும் போது பயண நேரம் மிகவும் அதிகமாக ஆனால் மிகக் குறைந்த நிறுத்தத்துடன் இயக்கப்படுகின்றது. எனவே இந்த ரயிலுக்கு இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மங்களுருக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்பது சுமார் 25 ஆண்டுகால கோரிக்கை ஆகும். இதைப்போல் இந்த ரயில் காலஅட்டவணை கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆகவே இந்த ரயிலின் காலஅட்டவணை மாற்றம் செய்து இரவு நேர ரயிலாக இயக்க வேண்டும்.
திருச்சி - நியூஜெபல்குரி அம்ரித் பாரத் ரயில் நாகர்கோவில் நீட்டிப்பு:
திருச்சியிலிருந்து சென்னை வழியாக நியூஜெபல்குரிக்கு அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை மதுரை, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் வழியாக நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது சென்னை செல்ல கூடுதல் ரயில் சேவை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றங்கள் செய்யப்பட்டால், கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு அம்ரித் பாரத் ரயில்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும். ரயில்வே அதிகாரிகள் இந்த கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக வ.உ.சி. துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு
வெள்ளி 6, பிப்ரவரி 2026 9:35:22 PM (IST)

பெண்ணை தாக்கி கொலை செய்த வழக்கில் 2பேர் கைது!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:31:33 PM (IST)

அம்பையில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:10:18 PM (IST)

ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம்: கல்லூரி மாணவர்கள் ஆர்வம்
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:02:05 PM (IST)

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு புதிய திட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:53:16 PM (IST)

புதூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:23:24 PM (IST)









