» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவரை தாக்கிவிட்டு இளம்பெண் பலாத்காரம் : சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது!

செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:58:06 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே கணவரை தாக்கிவிட்டு அவரது கண்முன்னே இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட அரசர்குளம் பகுதியில் தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த முகமது மஹ்புல் ஹூசைன் (27) என்பவர் நெல்லை மாவட்டத்தில் பணியாளர் ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஹாலோ பிளாக் நிறுவன உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு அசாம் மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் மற்றும் அவரின் கணவரை வேலைக்கு சேர்த்து விட்டார்.

இந்த தம்பதி அங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். ஆனால் அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சம்பளம் குறைவாக வழங்கப்பட்டதாலும் தம்பதியினர் வேலையில் இருந்து விலகுவதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் இங்கிருந்து புறப்பட்டு கேரள மாநிலத்திற்கு சென்று வேலை தேட முடிவு செய்தனர். இதற்காக சம்பவத்தன்று இருவரும் அரசர்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இதுகுறித்து முகமது மஹ்புல் ஹூசைனுக்கு தெரியவந்தது. உடனே அவர் செல்போனில் தம்பதியை தொடர்புகொண்டு இங்கேயே வேலை செய்யுமாறு மிரட்டியுள்ளார். மேலும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் செய்வதறியாது திகைத்தனர். அதற்குள் ஆட்டோ வரும் வழியை அறிந்துகொண்ட முகமது மஹ்புல் ஹூசைன், தன்னுடன் 16 மற்றும் 14 வயதுடைய சிறுவர்களை ஒரே மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு நெல்லை அருகே உள்ள சிவந்திப்பட்டி பகுதியில் காத்திருந்தார்.

அங்கு சிறிது நேரத்தில் தம்பதி பயணித்த ஆட்டோ வந்தது. அப்போது ஆட்டோவை வழிமறித்த 3 பேரும், தம்பதியை கீழே இறங்குமாறு கூறினர். இதைக்கண்ட ஆட்டோ டிரைவரிடம், உனது ஆட்டோவில் பயணித்துள்ள இவர்கள் இருவரும் கல்குவாரியில் இருந்து பணத்தை திருடிவிட்டதாக முகமது மஹ்புல் ஹூசைன் கூறினார். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி 3 பேரும் சேர்ந்து தம்பதியை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.

அப்போது திடீரென 3 பேரும் சேர்ந்து பெண்ணின் கணவரை சரமாரி தாக்கியுள்ளனர். மேலும், அந்த இளம்பெண்ணை 3 பேரும் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 3 பேரும் சேர்ந்து தம்பதியை மீட்டு சாலைப்பகுதியில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பலாத்காரத்தால் அதிர்ச்சியும், காயமும் ஏற்பட்டதால் இளம்பெண் கதறினார்.

அவர் தனது கணவருடன் ஆட்டோ மூலம் அங்கிருந்து புறப்பட்டு சென்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தப்பி சென்ற முகமது மஹ்புல் ஹூசைன் மற்றும் 2 சிறுவர்களை தேடி வந்தனர். நேற்று காலை அவர்கள் 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண் எதிரிலேயே வடமாநில இளம்பெண்ணை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory