» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தலுக்காக பணியிட மாற்றம் மீண்டும்: பழைய இடத்திற்கு மாற்றக் கோரும் அலுவலர்கள்!
புதன் 12, ஜூன் 2024 10:58:50 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில், தேர்தலுக்காக மாற்றப்பட்ட பழைய இடத்திலேயே பணியிடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என வருவாய்த்துறை காவல்துறை உட்பட பல்வேறு துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த நிலையில் அதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4-ம் தேதி நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான லட்சுமிபதி பாராளுமன்றத் தேர்தலை திறம்பட நடத்தி முடித்தார். இந்த பணிகளுக்காக வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் தேர்தல் காரணமாக வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள் பலர் ஏற்கனவே சிறிது காலத்திற்கு முன்புதான் பணியிடம் மாற்றம் பெற்று அந்தந்த பணிகளுக்கு பணியமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் தேர்தல் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே பல்வேறு உயர் அதிகாரிகள் மீண்டும் தேர்தல் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக முடிவடைந்த நிலையில் தேர்தலுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்ட வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மீண்டும் ஏற்கனவே பணிபுரிந்த பணியிடங்களில் சிறிது காலம் மட்டுமே பணிபுரிந்தமையால் அதனை முழுவதுமாக நிவர்த்தி செய்யும் வகையில் மீண்டும் தேர்தலுக்காக மாற்றப்பட்ட பழைய இடத்திலேயே பணியிடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என பல்வேறு துறை உயர் அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.