» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பறவைகளுக்காக குடிநீர் தொட்டிகள் நிறுவும் பணி : ஆணையர் மதுபாலன் தொடங்கி வைத்தார்!
சனி 27, ஏப்ரல் 2024 11:28:31 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பறவைகளுக்காக 300 குடிநீர் தொட்டிகளை நிறுவும் பணியை ஆணையர் மதுபாலன் தொடங்கி வைத்தார்.
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகை தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சி நகர மயமாக்கல் சமூகப் பழக்கவழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட கால பருவ நிலை மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இவற்றில் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தாவரங்கள் பறவைகள் கால்நடைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும்.
இவற்றைக் கருத்தில் கொண்டு தற்போது நிலவும் அதிகப்படியான வெப்ப அலைகளால் பறவைகள் பாதிக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு அந்நிலையை போக்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக பறவைகளுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய பறவைகள் அதிகப்படியாக வந்து செல்லும் வாய்ப்புள்ளதாக கருதப்படும் பூங்காக்கள் மியா வாக்கி காடுகள் நுண் உரம் செயலாக்கம் மையங்கள் போன்ற இடங்களில் பறவைகளுக்கான குடிநீர் தொட்டிகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இவற்றில் முதற்கட்டமாக சுமார் 100 இடங்களில் 300 தொட்டிகளை நிறுவும் பணி இன்று ஸ்டேட் பாங்க் காலனி பூங்காவில் வைத்து மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் துவக்கி வைத்தார். மேலும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களுக்கு வசதியான இடங்களில் பறவைகளுக்கான குடிநீர் தொட்டி அமைத்து பறவை இனங்களை காக்க உதவுமாறு மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் வீ கேன் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.