» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாஜக ஆட்சி வருவதற்கு வாய்ப்பே இல்லை : திமுக வேட்பாளர் கனிமொழி திட்டவட்டம்!
வியாழன் 11, ஏப்ரல் 2024 8:27:10 PM (IST)
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே மறுபடி பாஜக ஆட்சி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பேசினார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று (10/04/2024) கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரிசல்குளம் ஊராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தின் போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இங்கு உள்ள சகோதர சகோதரிகளைப் பார்க்கும்போது நிச்சயமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த தொகுதிகள் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. பாஜக நிச்சயமாக எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மறுபடி ஆட்சி வருவதற்கு வாய்ப்பே கிடையாது என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.
ஏனென்றால் தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது பிரதமர் வரவில்லை, நிவாரணமும் தரவில்லை. தேர்தல் வந்ததால், தமிழ்நாட்டை சுற்றிச் சுற்றி வருகிறார். நேற்று கூட சென்னை வந்தார், இன்னும் மூன்று நாட்கள் மேல் வந்தாலும், நோட்டாவுக்கு கீழே தான் ஒட்டு இருக்கிறது. தமிழ் பேசத்தெரியவில்லை எனப் பிரதமர் வருத்தப்படுகிறார். நம்மை ஹிந்தி படியுங்கள் என்கிறார்கள், அவர்கள் தமிழ் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் தமிழ்நாடு முதலமைச்சர் கட்டாயம் ஒரு தமிழாசிரியரை உங்களுக்கு அனுப்பி வைப்பார்.
பெரிய பணக்காரர்களுக்கு சுமார் ரூ.15 லட்சம் கோடி கார்பரேட் வங்கிக் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன், கல்விக் கடன் ரத்து செயல்படும். நமது ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் கேஸ் சிலிண்டர் 500 ரூபாய், பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் என வழங்கப்படும். அதே போல் தே போல் 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். சம்பளம் ரூ.400 வழங்கப்படும்.
இந்தப் பகுதியில் மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் இலவச வீட்டு மனை பட்டா, காது கேட்கும் கருவிகள், விவசாயிகளுக்கு இடுபொருள்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம். பயணியர் நிழற்குடை ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து உங்களுக்காக பணியாற்ற எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை நீங்கள் வழங்க வேண்டும் என்று பேசினார்.
இந்தியன்Apr 12, 2024 - 10:18:26 AM | Posted IP 162.1*****