» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேளாண் திட்டத்திற்கு ரூ.34 கோடி கடன் வழங்க இலக்கு : ஆட்சியர் லட்சுமிபதி தகவல்!
வியாழன் 30, நவம்பர் 2023 10:38:42 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்திற்கு 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கு ரூ.34 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் லட்சுமிபதிதெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி தொடர்பான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: வேளாண்மை சம்பந்தமான உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு வேளாண் உட்கட்டமைப்பு நிதியை உருவாக்கியுள்ளது. இந்த நிதித் திட்டத்தின் கீழ் பிணையமற்ற குறைந்த வட்டியிலான கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 13 ஆண்டுகளில் (2020-21 முதல் 2032-33 வரை) வங்கிகள் மூலம் ஒரு இலட்சம் கோடிகடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.5990 கோடிகடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கு ரூ.34 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு 7 ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு 3 சதவீத வட்டி குறைப்புவழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பேசும் போது அறுவடைக்குப்பின் வேளாண்மைக்கான அனைத்து உட்கட்டமைப்புகளுக்கும் அதாவது மின்சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைப்பொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக கடன் பெறலாம்.
தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், போக்குவரத்து வசதிகள், முதன்மைபதப்படுத்தும் மையங்கள், பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்கவைக்கும் அறைகள், மின்னணு வணிக மையங்கள், மெழுகுபூசும் மையங்கள் போன்ற கட்டமைப்புகள் அமைக்கவும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். மேலும், இதர திட்டங்களான வேளாண் இயந்திர வாடகைமையம் மற்றும் உயர் தொழில் நுட்பமையம், சூரிய ஒளியில் இயங்கக் கூடியமின் மோட்டார் போன்ற திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் வட்டி சலுகை பெறலாம். அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
இத்திட்டமானது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்பொறியியல் துறை, மாவட்ட தொழில் மையம் மற்றும் மகளிர் திட்டம் போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள், ஆர்வமுள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் மாவட்ட திட்ட ஆலோசகர்கள் (தொடர்புக்கு -8903537510, 9894401815, 8015244809) உதவியுடன் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://agriinfra.dac.gov.in/ என்ற இணைய முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கிக்கிளைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர், இணைபதிவாளர், கூட்டுறவுதுறை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, மேலாளர், மத்திய கூட்டுறவு வங்கி, தூத்துக்குடி, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், மாவட்ட வளர்ச்சி மேலாளர், NABARD, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பொது மேலாளர், மாவட்டதொழில் மையம், உதவி இயக்குநர், District Level Consultant AIF திட்டம் தூத்துக்குடி, உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர்கள், புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டார்கள்.