» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பஸ் நிலையத்தில் மீண்டும் விநாயகர் ஆலயம் : இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 27, நவம்பர் 2023 11:25:54 AM (IST)
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நவீன மயமாக்கல் பணிக்காக இடம் மாற்றம் செய்யப்பட ‘ஸ்ரீ வெற்றி விநாயகர்' ஆலயத்தினை மீண்டும் பேருந்து நிலைய வளாகத்தில் நிறுவிட வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் இசக்கி முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த சிறிய தொழில் நகரமான தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அமைய பெற்ற காலத்திற்கு முன்பு குதிரைவண்டி மற்றும் கைவண்டி பயன்பாடு காலத்தில் இருந்தே சிறியதாக ஸ்ரீ விநாயகர் ஆலயமானது பூவரசு மரங்களுக்கிடையே பொதுமக்களின் பயண காவலாக யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஓரமாக பொதுமக்கள் வழிபாட்டில் இருந்து வந்தது.
இதனை 24.06.1982 அன்று சீரமைத்து நகராட்சி அதிகாரிகளின் அனுமதியிலும், பொதுமக்களின் ஒத்துழைப்பிலும் மூன்று நிலைகளாக விரிவு படுத்தி 'ஸ்ரீ வெற்றி விநாயகர்'-ஆலயத்தில் புதியதாக 'ஸ்ரீ விநாயகர் சிலை' மற்றும் ‘ஸ்ரீ முர்ச்சையர்' வாகனம் சிலை ஆகியவைகளை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அது நாள் முதல் 2018 ஜூன் மாதம் வரை 4 முறை கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மேலும் 1996-1997 காலகட்டத்தில் மின் இணைப்பு 07-344030249 பெறப்பட்டது. தொடர்ந்து 04.09.2019 வரை மாதம் 150 250 அலகு மின்சாரம் வீதம் பயன்பாடு செய்து முறையாக மின்கட்டணங்களை நிலுவையின்றி செலுத்தி வந்தோம்.
இந்நிலையில் அதுசமயம் இருந்த மாநகர ஆணையர் வைத்த வேண்டுகோள் மற்றும் அளித்த உறுதி மொழியை நம்பி மதிப்பளித்து இந்த பேருந்து நிலைய நவீனமயமாக்கல் பணிக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் முறையாக பாலாயனம் செய்து அந்த அத்திமர கட்டையினை பேருந்து நிலைய வளாகத்திற்குள், வ.உ.சி சாலையில் சுரேஷ் மெடிக்கல்ஸ்-க்கு எதிர்புரம் வைத்திருந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி மேயர் உத்தரவின்படி அதையும் அகற்றிவிட்ட நிலையில் இன்று வரை அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை ஏதும் எடுக்காது அலட்சியம் செய்கின்றனர்.
சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக அமைந்திருந்து பொதுமக்களின் பயண காவலாளியாக இருந்து வந்த இந்துக்களின் முழு முதற்கடவுள் என நம்பும் ‘ஸ்ரீ வெற்றி விநாயகர்' மற்றும் ‘ஸ்ரீ மூரசையார்' சிலைகளை பேருந்து நிலைய வளாகத்திற்குள் சிறிதேனும் இடம் தந்து இந்துக்களின் மனதினை புண்படாமல் பாதுகாப்பது தொடர்பாக ஏற்கனவே 03.10.2023 அன்று வேண்டுகோள் மனுவினை மாநகர ஆணையரிடமும், மாநகர மேயரிடமும் நேரடியாக வழங்கியுள்ளோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
PONNUTHURAINov 29, 2023 - 08:17:33 AM | Posted IP 172.7*****