» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டீ மாஸ்டரை கம்பால் வழிப்பறி: வாலிபர் கைது
ஞாயிறு 28, ஏப்ரல் 2024 10:09:35 AM (IST)
உடன்குடியில் டீ மாஸ்டரை கம்பால் கொடூரமாக தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம்,உடன்குடி மரியம்மாள்புரம் ஜெயபால் காலனியைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் தனசேகர் (34). உடன்குடி பஜாரில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 22-ந் தேதி இரவு தனது தாயாருடன் ஆயில்மில் முன்பு பொருட்கள் வாங்க பஜார் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தனசேகரின் தாயார் வைத்திருந்த கைப்பையை அந்த வழியாக வந்த வாலிபர் பிடுங்க முயன்றார்.
அப்போது தடுக்க முயன்ற தனசேகரை அங்கு கிடந்த கம்பால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குலசேரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செட்டியாபத்து பெருமாள்சாமி கோவில் தெருவைச் சேர்ந்த சித்திரை முத்து மகன் சூர்யா (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.