» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தாளாளர் கைது!
வெள்ளி 9, ஜூன் 2023 8:17:46 PM (IST)
தென்காசியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரியின் தாளாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி ஆசாத் நகர் பகுதியில் உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் தாளாளராக முகமது அன்சாரி உள்ளார். இவர் நேற்று அந்த கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயிலும் 17 வயதான 2-ம் ஆண்டு மாணவியை தனது அறைக்கு வரவழைத்து ஆபாசமாக பேசி, தவறாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டவாறு அந்த அறையில் இருந்து வெளியேறி, தனது வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில், குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கல்லூரி தாளாளர் முகமது அன்சாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.