» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.52லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

புதன் 15, பிப்ரவரி 2023 8:51:35 PM (IST)



தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படக்கூடிய ஆட்சி நடத்துவதாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் முன்னிலையில் 3,101 பயனாளிகளுக்கு ரூ.52,09,350/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் கலைஞர் காலத்தில் பல்வேறு நலவாரியங்கள் அமைக்கப்பட்டன. 

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்புக்கு வந்த 50 நாட்களுக்குள் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க துவங்கினார்கள். 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த நலவாரியம் உயிர்ப்பிக்கப்பட்டு இயங்கி கொண்டிருக்கிறது. கலைஞர் சமூகத்தின் அடித்தளமாக, ரத்தநாளங்களாக இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைவராக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை வகுத்து தந்துள்ளார். கலைஞர் வழியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி உதவித்தொகையை அதிகப்படுத்தி கொடுக்கக்கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.
 
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி, மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படக்கூடிய ஆட்சி. நலவாரியத்தில் என்னென்ன நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன என்பதை தொழிலாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். துத்துக்குடியில் 36,000 பேர் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நலவாரியத்தில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 18 நலவாரியங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,12,280 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இன்னும் அதிகமான பேரை நலவாரியத்தில் இணைக்க வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு துறைகளில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளார். மேலும், திட்டங்கள் மக்களை சென்றடைந்து இருக்கிறதா என்று கள ஆய்வும் செய்து வருகிறார். தொழிலாளர்களுக்கு மாவட்ட வாரியாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இருக்கிறது. கலைஞர் சலவைத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், வீட்டுப்பணியாளர்கள் என அனைவருக்கும் வாரியங்கள் அமைத்தார். 

கடந்த 20 மாத காலத்தில் 20 இலட்சம் பேர் வாரியத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 1.5 இலட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். கலைஞர் ஆட்சிக்காலத்தில் 2011ம் ஆண்டு வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.25000த்தில் இருந்து தற்போது ரூ.50,000ஆகவும், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் திருமண உதவித்தொகை தற்போது ரூ.9000ஆகவும், பேறுகால உதவி ரூ.6000த்தில் இருந்து தற்போது ரூ.18,000ஆகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது.

வாரியத்தில் பதிவு செய்த வீடு கட்டும் தொழிலாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ரூ.4 இலட்சம் இலவசமாக வழங்குகிறோம். கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2000 ஆக விரைவில் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டம், மக்களை தேடி மருத்துவத்திட்டம் என்று பல்வேறு திட்டங்களை நிதிப்பற்றாக்குறைக்கு மத்தியிலும் செயல்படுத்தி வருகிறார்.

எந்தெந்த தொழில் செய்கிறார்களோ அவர்களை அந்தந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். அரசு வழங்கும் பாதுகாப்பு உபகரணங்களை தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட தலைவர் கலைஞர் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது ஆட்சியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிரூட்டப்பட்ட வாரியங்களை தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என  தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, தொழிலாளர் உதவி ஆணையர்கள் க.திருவள்ளுவன், (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா (ச.பா.தி.) மற்றும் பல்வேறு நலவாரிய உறுப்பினர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

SathusinghrJul 12, 2023 - 01:35:23 AM | Posted IP 172.7*****

Ok

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory