» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.68லட்சம் மோசடி: கணவன்-மனைவி உட்பட 3பேர் கைது!
புதன் 20, அக்டோபர் 2021 4:55:36 PM (IST)
தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக போலி பணி நியமண ஆணை வழங்கி ரூ.68லட்சம் மோசடி செய்த கணவன் மனைவி உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் சிலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரிடம் புகார் அளித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் வனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஊர்காவல்பெருமாள், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் பிள்ளைமுத்து ஆகிய போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மில்லர்புரம், ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த பிச்சைமணி மகன் சக்திவேல் (37), அவரது மனைவி ஜெயசித்ரா (30), தூத்துக்குடி கிருபை நகரை சேர்ந்த கல்கண்டு மனைவி உஷா (34), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த மூக்கையா மகன் முத்துபாண்டி மற்றும் ஓட்டப்பிடாரம் சிலோன் காலனி பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் கார்த்திக்குமார் ஆகிய 5 பேரும், ஓட்டப்பிடாரம் சிலோன் காலனி பகுதியை சேர்ந்த சண்முகராஜ் மகன் முத்துகுமார் (29) என்பவரிடம் பொது பணித்துறையில் நல்ல வேலையில் இருப்பதாகவும், அதற்கு கூறி ரூ.3லட்சம் கொடுத்தால்போதும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பி முத்துகுமார் தனக்கும், தனது மனைவி மற்றும் மைத்துனர் ஆகிய 3 பேருக்கும் வேலை வேண்டும் என்று கூறி மேற்படி சக்திவேலிடம் ரூ.6லட்சமும், முத்துபாண்டியிடம் ரூ.3லட்சம் என மொத்தம் ரூ.9 லட்சம் பணத்தை வங்கி மூலமாக கொடுத்துள்ளார். இதனையடுத்து எதிரிகள், பணம் கொடுத்த முத்துகுமார் மற்றும் அவரது மைத்துனருக்கு திருச்செந்தூர் பொது பணித்துறை குடோனில் பொறுப்பாளராகவும், அவரது மனைவிக்கு தூத்துக்குடி பொது பணிதுறையில் கணக்கராகவும் போலியாக பணி நியமன ஆணை தயார்செய்து அதில் பொதுபணித்துறை அதிகாரிகள் போல மேற்படி 5 எதிரிகளும் போலியாக கையெழுத்திட்டு அரசு வேலைக்கான பணியாணையை வழங்கி சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அது போலியான பணியாணை என்று தெரிந்ததும் முத்துகுமார், மேற்படி எதிரிகள் 5 பேரிடமும் சென்று பணத்தை திரும்ப கேட்டதற்கு, சக்திவேல் கடந்த 10.05.2021 அன்று ஒரு மாதத்தில் முழு பணத்தையும் திருப்பி கொடுத்துவிடுவதாக கூறி முதலில் ரூ.90ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். அதன்பிறகு இதுவரை மீதி பணம் எதுவும் தரவில்லை என்றும், மீதி பணத்தை தருமாறு கேட்டதற்கு தர முடியாது என்று மறுத்துள்ளனர்.
இதே போன்று தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் பகுதிகளில் வேறு சிலரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக போலி நியமண ஆணை தயாரித்து அதில் போலியான அரசு முத்திரைகளை பயன்படுத்தி கையெழுத்திட்டு மோசடியாக ரூ. 68,10,000/- பணத்தினை ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. இதில், சக்திவேல், அவரது மனைவி ஜெயசித்ரா மற்றும் உஷா ஆகிய 3 பேரையும் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மற்றவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மோசடி நபர்களை கைது செய்த தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.
அப்பாவிOct 20, 2021 - 07:07:34 PM | Posted IP 162.1*****