» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் நுழைந்து துப்பாக்கி: சூடு இமாம் உள்பட 6 பேர் பலி
புதன் 1, மே 2024 8:56:07 AM (IST)
ஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் நுழைந்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இமாம் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதுமுதல் அங்கு பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. இதனால் சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர தலீபான் அரசாங்கம் முயன்று வருகிறது. எனினும் பல்வேறு இடங்களில் கோஷ்டி மோதல்கள் தொடர் கதையாக உள்ளது.
இந்தநிலையில் ஹெராத் மாகாணம் குசாரா பகுதியில் உள்ள ஒரு மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது அந்த மசூதிக்குள் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரி துப்பாக்கி சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கி சூட்டில் மசூதியின் இமாம் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் இரு தரப்பினர் மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் மற்றும் ஐ.நா.சபை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்