» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பொதுமக்கள் மீது குண்டு வீசுவது நியாயம் கிடையாது : இஸ்ரேலுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை!
சனி 11, நவம்பர் 2023 3:43:24 PM (IST)
இஸ்ரேல் தன்னைக் காத்துக் கொள்ள காஸா மீது பெரும் தாக்குதலை நடத்துவது சிறந்த வழி இல்லை என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் "பொதுமக்கள் மீது குண்டுவீச்சு நடத்துவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. அப்பாவி மக்கள் பலியாவதைப் பார்க்கும்போது மனக்கசப்பே ஏற்படுகிறது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் குண்டுவீச்சால் கொல்லப்படுகிறார்கள். நாம் ஜனநாயக அரசு என்பதால் நமக்கு கொள்கைகள் முதன்மையானவை. எல்லா உயிர்களும் முக்கியம் எனக் கருதுவதே இஸ்ரேலுக்கும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கும் எதிர்கால நோக்கில் நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.
காஸாவில் ஹமாஸுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நிலவி வருகிறது.மத்திய காஸாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனை அருகில் நடந்த தாக்குதலில் பலர் பலியாகியுள்ளனர். உலக சுகாதார நிறுவனம், காஸாவின் மருத்துவ அமைப்பு நிர்கதியாக நிற்பதாக தெரிவித்துள்ளது.இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் சரணடைவதற்கு ஒப்பானது எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.