» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் கடும் பனிமூட்டத்தால் சங்கிலித் தொடர் விபத்து: போக்குவரத்து பாதிப்பு!
வியாழன் 9, நவம்பர் 2023 10:49:12 AM (IST)
அமெரிக்காவில் ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் சங்கிலித்தொடர் விபத்தில் சிக்கின. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தின் தெற்கு பகுதியான நியூ ஒர்லியன்சில் மிகப்பெரிய சதுப்பு நிலம் உள்ளது. இங்கு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு மளமளவென எரிந்தது. இதனால் தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.இதற்கிடையே அங்கு அதிகாலையில் கடும் பனிப்பொழிவு உருவானது. இந்த பனிப்பொழிவுடன் காட்டுத்தீயில் இருந்து வெளியேறிய புகையும் சேர்ந்து கொண்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் பரவி பனிமூட்டமாக காணப்பட்டது.
அங்கு அமைந்திருந்த சாலையில் முன்னால் செல்லும் வாகனங்களை பார்க்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் அடித்தது. மேலும் போக்குவரத்து சிக்னல்களில் எரியும் விளக்குகளை காண முடியாததால் வாகனங்கள் நகர முடியாமல் திணறின.
அப்போது கனரக லாரி ஒன்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது எதிர்பாராமல் மோதி விபத்திற்குள்ளானது. அதன் பின்னால் வந்த வாகனங்கள் லாரி உடன் அடுத்து அடுத்து மோதி சங்கிலித்தொடர் விபத்தில் சிக்கியது. இதில் 11 வாகனங்கள் அப்பளம்போல் நொறுங்கின. இந்த விபத்து காரணமாக அந்த சாலை முழுவதும் வாகனங்களால் நிரப்பப்பட்டு குப்பை குவியலாக காணப்பட்டது.
பேரிடர் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சங்கிலிதொடர் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார். மேலும் 8-க்கும் அதிகமானோார் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் இதே பகுதியில் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானது நினைவுக்கூரத்தக்கது.