» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐபிஎல் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடி இழந்த கணவர்: கடன் நெருக்கடியால் மனைவி தற்கொலை

புதன் 27, மார்ச் 2024 11:30:48 AM (IST)

கர்நாடகாவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை கணவர் இழந்த நிலையில், கடன் நெருக்கடியால் மனைவி தற்கொலை செய்து கொண்டார். 

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிரிநகரை சேர்ந்தவர் தர்ஷன் பாபு (30). மென்பொருள் பொறியாளரான இவர், கடந்த 2021-ம் ஆண்டு ரஞ்சிதாவை (24) திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த த‌ர்ஷன் பாபு கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். 

தொடக்கத்தில் கையில் இருந்த பணத்தை இழந்த அவர், பின்னர் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு ரஞ்சிதா பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் தர்ஷன் பாபு தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என எதிர்பார்த்து அவர், ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடிக்கும் அதிகமாக இழந்தார். கடன் வாங்கிய பணத்தையெல்லாம் சூதாட்டத்தில் இழந்ததால் கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பி செலுத்துமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சித்ரதுர்காவில் இருந்த நிலத்தை விற்று ரூ.70 லட்சம் கடனை அடைத்துள்ளார். மீதமுள்ள ரூ.84 லட்சத்தை திரும்ப தரக்கோரி கடன் கொடுத்தவர்கள் தர்ஷன் பாபுவுக்கும், அவரது மனைவி ரஞ்சிதாவுக்கும் தொல்லை கொடுத்துள்ளனர். கடன் தொல்லை தாங்க முடியாமல் கடந்த 18-ம் தேதி ரஞ்சிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அவரது படுக்கை அறையில் சோதனை நடத்தியபோது 2 பக்க தற்கொலை கடிதம் கிடைத்தது. அதில் ரஞ்சிதா, தனது கணவர் தர்ஷன் பாபு ஐபிஎல் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்தது, குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை, கடன் கொடுத்தவர்களின் மிரட்டல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரஞ்சிதாவின் தந்தை வெங்கடேஷ் கூறும்போது, ‘‘கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி காரணமாகவே ரஞ்சிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார். அரசும் போலீஸாரும் ஐபிஎல் சூதாட்ட கும்பலை ஒழிக்க வேண்டும்'' என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory