» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டம்
வெள்ளி 10, மே 2024 3:55:37 PM (IST)
திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டம் நடைபெற்றது.
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முதல் குரல் கொடுத்த பாஞ்சாலங்குறிச்சி மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மற்றும் வீரசக்க தேவி ஆலய திருவிழா இன்றும் நாளையும் (மே 10, 11) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதியை அவரது வம்சாவழியினர் எடுத்து வருவது வழக்கம்.
அந்த வகையில், திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு 38 –வது ஆண்டாக மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில், செந்தில் ஆண்டவர் புண்ணிய தீர்த்தம் மற்றும் ஜோதி தொடர் ஓட்ட பேரணி தொடக்க விழா, திருச்செந்தூர் வீரபாண்டிய கட்டபொம்மன் மடம் முன்பு நடைபெற்றது. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் நடராஜன் இறைவணக்கம் பாடினார். தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி வரவேற்று பேசினார்.
ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் துணை தலைவர் வீரபாண்டி செல்லச்சாமி, வழக்கறிஞர் ஆறுமுகம், மதிமுக தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள், மதிமுக வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், சந்திரன், முள்ளக்காடு சின்னராஜ், அதிமுக மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான மந்திரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் சரவணப்பெருமாள், திருச்செந்தூர் காவல்துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கி ஜோதியை தொடங்கி வைத்தனர்.தொடந்து புண்ணிய தீர்த்தம், நினைவு ஜோதி மற்றும் வீரவாள் ஏந்தியவாறு இளைஞர்கள் தொடர் ஓட்டமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு அணிவகுத்து சென்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊமைத்துரை தொண்டர் படை தலைவர் ராஜா, செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சுகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.