» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் விழா: தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை!!

வெள்ளி 10, மே 2024 3:26:25 PM (IST)


பாஞ்சாலங்குறிச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர்  ச.அஜய் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா ஆண்டுதோறும் சித்திரை திங்கள் கடைசி வெள்ளி அன்று சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் - 2024 தேர்தல் நடத்தை விதிகள் 16.03.2024 முதல் நடைமுறையில் உள்ளதால் அவ்விதிகளுக்குட்பட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் பாஞ்சாலங்குறிச்சியில் இன்று நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ம.பிரபு , கூடுதல் காவல் காண்காணிப்பாளர் சி.உண்ணிகிருஷ்ணன் , ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) போ.முத்துக்குமார் , வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரர், வீரசக்க தேவி ஆலயக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் , வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரரான வீமராஜா என்ற ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் துரை அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள்.


கட்டபொம்மன் வரலாறு

ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமுகத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக 1760ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். கட்டபொம்மன் வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் பாளையக்காரராக இருந்து வந்ததால் தந்தைக்கு உதவியாக இருந்;தார். கட்டபொம்மன் பிப்ரவரி 2ஆம் தேதி, 1790ஆம் ஆண்டில் 47வது பாளையக்காரராக அரியணை பொறுப்பை ஏற்றார். வீரபாண்டிய கட்டபொம்மன்  அரியணை பொறுப்பை ஏற்ற அதே சமயத்தில் ஆங்கிலேயர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கினர்.

பாளையக்காரர்கள்; அனைவரிடமிருந்து கப்பம் பெற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களால் கட்டபொம்மனிடம் தங்கள் சர்வாதிகாரம் பலிக்காமல் அவமானம் அடைந்தனர். அதனால் சமாதானம் பேசுவது என்ற போர்வையில் கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினார்கள். ஜாக்சன் துரை என்பவர் வரி கட்டுமாறு கட்டபொம்மனைப் பணித்தார்.  ஆனால் கட்டபொம்மன் ஜாக்சன் துரையிடம் நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் என்று எதிர்த்துப் பேசினார். அங்கே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியாகி கைகலப்பில் முடிந்தது. ஆங்கிலேயரின் இந்த திட்டமிட்ட வஞ்சக வலையில் சிக்காமல் தன் வீரத்திறமையால் அங்கிருந்து தப்பினார். வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அனைவர் மனதிலும் வீரத்தை விதைத்தது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பின் கைது செய்யப்பட்டார். பின் கயத்தாறு புளிய மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சைக் கேட்கவுமில்லை. மாறாகக் கம்பீரத்தோடு எனது தாய்மண்ணைக் காப்பதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையக்காரர்களைத் திரட்டினேன். போர் நடத்தினேன் என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார்.  தூக்குமேடை ஏறிய போதும், அவரது பேச்சில் வீரமும் தைரியமும் நிறைந்திருந்தது. அக்டோபர் 19ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory