» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு பள்ளி சீருடை தைக்கும் பணியை வழங்க வேண்டும்: கூட்டுறவு சங்க பெண்கள் கோரிக்கை
வெள்ளி 10, மே 2024 8:57:58 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை தைக்கும் பணியை கூட்டுறவு சங்க பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சீருடைகளை தைக்கும் பணியில் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் பெண்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டு, அதன்மூலம் ஏராளமான பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்தே சீருடைகளை தைத்து கொடுத்து வருமானம் ஈட்டி வந்தனர். இதற்காக பேண்டுக்கு ரூ.40, சட்டைக்கு ரூ.20, டவுசருக்கு ரூ.18 வழங்கப்பட்டு வந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கீழ் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி மற்றும் விளாத்திகுளம் எட்டயபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 பெண்கள் இந்த பள்ளி சீருடைகளை தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீருடை தைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பெண்கள் அந்தந்த அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் சீருடைக்கான அளவுகளை எடுத்து அதை அரசுக்கு அனுப்பி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சீருடை தைக்கும் பணி வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை சீருடை தைப்பதற்கான உத்தரவு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சிலோன் காலனியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், இந்த ஆண்டுக்கான பள்ளி சீருடை தைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதமே வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை சீருடை தைக்க உத்தரவு வழங்கப்படவில்லை.
இதை தொடர்பாக விசாரித்த போது, தமிழக அரசு இந்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடை தைக்கும் பணியை தனியாருக்கு கொடுத்து உள்ளதாக தெரிகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு மீண்டும் எங்களுக்கு சீருடை தைக்கும் பணியை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.