» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி மாணவர்கள் சாதனை
வெள்ளி 1, ஜூலை 2022 3:48:42 PM (IST)
தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 9பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் மத்திய அரசின் மனதவள மேம்பாட்டு துறை சார்பில் தேசிய வருவாய் வழி திறன் படிப்புதவி திட்டத்தின் மூலம் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூபாய் ஆயிரம் விதம் 48,000/-ருபாய் கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 5ம் தேதி நடத்தப்பட்ட 2021-2022ம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் 9 பேர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே பழனி செல்வம் தலைமை வகித்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளிச் செயலாளர் கண்ணன், பொருளாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் முத்தமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி குழு உறுப்பினர்கள் பொன் ராமலிங்கம், ராஜா அமரேந்திரன், மணிக்கொடி, ராமசாமி, ஆசிரியர்கள் சகாயகலாவதி, ராதாகிருஷ்ணன், நித்யாஸ்ரீ, ஜெப அகிலா, உண்ணாமலை தாய், சங்கரேஸ்வரி,சாந்தினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.